I'm always "Squabble with Rife"

Wednesday, April 30, 2014

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட பெண்

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட பெண்
போராளி யார் என்று கேட்டால் ஜான்சி ராணி என்பீர்கள். ஆம் வட ஹிந்திய பாடத்திட்டமும், ஜீ-தமிழ் தொலைகாட்சியும் நமக்கு அப்படி தான் சொல்லி கொடுத்துள்ளன. ஆனால் வீர தமிழச்சி வேலுநாச்சியார் பற்றி பேசுவதில்லை.

ஜான்சி ராணி காலத்துக்கு முன்னரே (கி.பி 1772)
தனது ராஜ்யத்தை இழந்து மீண்டும் அடைந்த
போராடி வென்ற தமிழச்சி வீர மங்கை வேலு நாச்சியார் ஆவார். அவரைப் பற்றிய முக்கியக் குறிப்புகள். ஜான்சி ராணி (கி .பி 1835-1858 )காலத்திற்கு முன்னரே வெள்ளையனை எதிர்த்து போரிட்ட முதல் பெண் அரசி வேலு நாச்சியார் 25-12-1796 - இல் வீர மரணமடைந்தார்.
ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு வெற்றியும்
பெற்ற முதல் பெண்மணி.



உலகில் வேறு எந்த ராணியும் வேலுநாச்சியார்
வீரத்திற்கும் அரசியல் விவேகத்திற்கும்
இணை இல்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது, அரபி, பிரஞ்ச், இங்கிலிஷ், ஜெர்மன் என பத்து மொழிகள் பேசக்கற்றவர்.சிறு வயதிலேயே போர்க் கலைகளிலும் தேர்ந்தவராக விளங்கினார். வாள் சண்டை, வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், வளைதடி ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்.

போர்வாளை தன் கைகளால் இரண்டாக உடைக்கும் வலிமைப் பெற்றவர்.ஆறடி உயரத்தில் பேரெழில் கொஞ்சும் அழகில் மயிலாகவும் வீரத்தில் விட்டு கொடுக்காத புலியாக இருந்தவர்.1790ல் தனது மகள் இறந்த பிறகு வேதனையால் நோய்வாய்பட்டவர் 1796ல் டிசம்பர் 25ல் இறந்தார். இறக்கும் முன் மருது சகோதரர்களை தனது வாரிசாக அறிவித்து சிவகங்கையை ஒப்படைத்தார்...

Tuesday, April 29, 2014

யானையின் எடை

அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.

யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.

Monday, April 28, 2014

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.!!!

Sunday, April 27, 2014

முயற்சி

ஒரு ஊர்ல ஒரு ராஜா. அந்த ராஜாவுக்கு வேலை செஞ்ச ஒரு தளபதிக்கு வயசாயிடுச்சு. வேற ஒரு தளபதி நியமிக்க முடிவு செஞ்சாரு. வித்தியாசமான ஒரு தேர்வு செய்யணும்னு நெனைச்சாரு. தளபதி தேர்வை கேள்விப்பட்டு பல பேர் போட்டி பொட முன் வந்தாங்க.

ராஜா, தகுதி உள்ள எல்லாரையும் அரண்மனைக்கு வரச்சொல்லி, ஒரு சின்ன விளக்கம் தந்தாரு. அதாவது - இந்த கோட்டைக்குள்ள பின்பக்கத்துல பெரிய 40 அடி உயரமுள்ள ஒரு வாசல் இருக்கு. அதோட கதவு நல்ல கனமான உலொகத்துல செஞ்சது. இதுவரைக்கும் யாராலெயும் அதை திறக்க முடியலை. அப்படி, இப்படின்னு 30 நிமிஷம் பேசினாரு. அந்த கதவை திறக்கிறவங்களுக்கு

இதை கேட்ட அப்புறம் கூட்டம் 10 பேரா குறைஞ்சுடுச்சு! இது என்ன? யாராலயும் திறக்க முடியாததில்ல ராஜா செய்ய சொல்றாரு. இதுக்கு முன்னாடி பெரிய்ய வீரர்கள் எல்லாம் இருந்திருக்காங்க. அவங்களாலயும் திறக்கமுடியாதது இல்லயா இது? நம்மால ஆகாது!! அப்டின்னு கிளம்பிட்டாங்க.

ராஜா மீதமிருந்த 10 பேரையும் அந்த இடத்துக்கு கூட்டிக்கிட்டு போனார். எல்லாரும் அந்த கதவை பார்த்து பிரமிச்சு நின்னுக்கிட்டுருந்தாங்க!! இந்த கதவை திறக்கரவங்களுக்கு தளபதி ஆகிற தகுதி இருக்கிறதா ராஜா எல்லார்கிட்டயும் சொன்னாரு. கதவை பார்த்த அப்புறம் நெறைய பேர் கஷ்டம்தான் என்ன பண்றது. எப்டி திறக்கறதுன்னு பக்கத்துல இருந்தவங்க கிட்ட பேசிக்கிட்டாங்க!

ஒருத்தன் மட்டும் கதவு கிட்ட போய் கையை வெச்சு தள்ளி பார்த்தான். அட! என்ன ஆச்சரியம் கதவு திறந்துடுச்சு!!!

ராஜா அவனையே பாராட்டி தளபதி ஆகிற தகுதி உனக்குத்தான் இருக்கு. பல பேர் சொல்லுறதுனாலயும், ராஜா சொல்றாருங்கறதாலயும் முயற்சி செய்யாம இருக்கிறதுதான் முதல் கோழைத்தனம்!

முயற்சி செய்யற ஒரு வீரன் தான் என் மக்களுக்கு தளபதியா இருக்கணும் அப்டின்னாரு.

Saturday, April 26, 2014

நாம் மறந்து போன சமையல்

நம் முன்னோர்கள் பலர் வயதில் ஆரோக்கிய மாக வாழ்ந்ததற்கு அவர்களுடைய உணவுப் பழக்கமே முக்கியக் காரணம். அவர்கள் உணவையே மருந்தாக உட்கொண்டதால்தான் எந்த நோய்நொடியும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். நாம் மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளில் சில இங்கே...

உடல் மெலிவாக உள்ளவர்களுக்கு மணத்தக்காளித் துவையல் :

தேவையானவை: மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு, மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பூண்டு - 4 பல், இஞ்சி - ஒரு துண்டு, தேங்காய் - ஒரு கீற்று, கடலைப் பருப்பு - ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கு.

எப்படி செய்வது: கீரையை நன்றாகச் சுத்தம்செய்து, மஞ்சள்தூள் சேர்த்து வெறும் வாணலியில் போட்டு வதக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கீரை தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்றாக வதக்கவும். வதங்கியதும், கீரையையும் அதில் போட்டு வதக்கி, துவையலாக அரைக்கவும். சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.

இதன் மருத்துவப் பயன்: குடல், வாய், நாக்கு, தொண்டையில் ஏற்படும் புண்களுக்கு மிகச்சிறந்த நிவாரணி. உடல் மெலிவாக உள்ளவர்களுக்கு ஊட்டம் தரும். குடியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சாப்பிட, கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டு எடுக்கும்.

சளி, இருமல் போக காராமணி நெல்லி ரசம்

தேவையானவை: காராமணி - 200 கிராம், நெல்லிக்காய் - கால் கிலோ, மிளகு, சீரகம் - தலா அரைத் தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 6, பூண்டு - 10 பல், மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு - தேவைக்குத் தக்கபடி.

எப்படி செய்வது: ஒரு லிட்டர் தண்ணீரில் காராமணியை நன்றாக வேகவைத்து, தண்ணீரை மட்டும் தனியாக வடித்து எடுக்கவும். விதை நீக்கிய நெல்லிக்காயுடன் காராமணி வேகவைத்தத் தண்ணீரைக் கொஞ்சமாக ஊற்றி, மிக்ஸியில் விழுதாக அடித்து எடுத்துச் சாறு பிழியவும். பின்னர், நெல்லிக்காய் சாறையும் காராமணி வேகவைத்தத் தண்ணீரையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை வெறும் வாணலியில் லேசாக வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடித்துவைத்துள்ள மசாலாவைப் போட்டு நன்றாக வதக்கவும். வதங்கியதும், நெல்லிச் சாறுக் கலவையை ஊற்றி, உப்பு சேர்த்து லேசான தீயில் வைக்கவும். ரசத்தை ஒருபோதும் கொதிக்கவிடக் கூடாது. நுரை பொங்கியதும் இறக்கிவிட வேண்டும்.

இதன் மருத்துவப் பயன்: புளி, தக்காளியினால் செய்யப்படும் ரசம், ரத்தத்தைச் சுண்டச் செய்யும். ஆனால், இந்தக் காராமணி நெல்லி ரசம் ரத்த உற்பத்தியை அதிகரிக்கும். ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். சளி, இருமல், வறண்ட சருமம், சைனஸ் போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும். களைப்பு, சோர்வைப் போக்கி சுறுசுறுப்பு தரும்.

நினைவுத் திறனை மேம்படுத்த வல்லாரை வத்தக்குழம்பு

தேவையானவை: வல்லாரை - 4 கைப்பிடி, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, சீரகம், வெந்தயம் - தலா அரை தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 8, பூண்டு - 10 பல், சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி, எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி, கத்தரிக்காய் - 100 கிராம், மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி, எண்ணெய் - 2 தேக்கரண்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு - தேவைக்கு.

எப்படி செய்வது: வல்லாரையைச் சுத்தம் செய்து, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வெறும் வாணலியில் வதக்கி தனியாகவைத்துக்கொள்ளவும். கத்தரிக்காயைச் சின்னச் சின்னதாக அரிந்து, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வெறும் வாணலியில் வதக்கித் தனியாக எடுத்துவைக்கவும். வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், சிறியதாக அரிந்த பூண்டு மற்றும் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை வெறும் வாணலியில் நன்றாக வதக்கி, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்துவைத்துள்ள விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர், கத்தரிக்காயையும் அதில் போட்டு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். முதல் கொதி வந்ததும் எலுமிச்சைச் சாறை ஊற்றவும். நன்றாகக் கொதித்து, வத்தல் குழம்பு பக்குவம் வந்ததும் வல்லாரையை அதில் போட்டு, கீழே இறக்கவும்.

மருத்துவப் பயன்: நினைவுத் திறனை மேம்படுத்தும். வலிப்பு நோயைக் குணப்படுத்தும். சுவாசம் மற்றும் இதயப் பிரச்னைகளுக்கு நல்லது.

மூட்டு வலி போக்க பஞ்சமுட்டிக் கஞ்சி

தேவையானவை: பச்சரிசி - 2 கைப்பிடி, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, உளுந்து - தலா 2 தேக்கரண்டி, மிளகு - கால் தேக்கரண்டி, சீரகம் - அரை தேக்கரண்டி, உப்பு - தேவைக்கு.

செய்முறை: உப்பு தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து தனித்தனியாக எடுத்துவைக்கவும். பாத்திரத்தில் தேவையான அளவுக்குத் தண்ணீர் ஊற்றி பச்சரிசியை மட்டும் வேகவைக்கவும். முதல் கொதி வந்ததும் கடலைப் பருப்பையும், இரண்டாவது கொதி வந்ததும் துவரம் பருப்பையும் போட்டு வேகவைக்கவும். அதேபோல், மூன்றாவது கொதி வந்ததும் உளுந்தையும், நான்காவது கொதி வந்ததும் பாசிப் பருப்பையும் போட்டு வேகவைக்கவும். அனைத்தும் நன்றாக வெந்ததும் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கஞ்சியில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கீழே இறக்கவும்.

மருத்துவப் பயன்: வாத நோய்களுக்குப் பலன் தரும். நடக்க முடியாமல் மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு ஏற்ற உணவு. அதேபோல் இரண்டு வயதாகியும் நடக்க முடியாத குழந்தைகளுக்கு ஊட்டம் அளித்து, நடக்க உதவி செய்யும். ஃபுட் பாய்சன் ஏற்பட்டால், இரண்டு வேளை இந்தக் கஞ்சி சாப்பிட சரியாகும்

Friday, April 25, 2014

தமிழ் பெயர்

இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது.
கன்னடா------முடியாது
தெலுங்கு----- முடியாது
மலையாளம்------முடியாது
ஏனைய மொழிகள்----முடியாது
ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வறையருக்கப்பட்டது. ஆனால் தமிழில்----
தமிழ்,தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன் , தமிழரசன், தமிழ்க்கதிர்,தமிழ்க்கனல்,தமிழ்க்கிழான்,தமிழ்ச்சித்தன்,
தமிழ்மணி, தமிழ்மாறன், தமிழ்முடி, தமிழ்வென்றி, தமிழ்மல்லன், தமிழ்வேலன், தமிழ்த்தென்றல், தமிழ்த்தும்பி,தமிழ்த்தம்பி,தமிழ்த்தொண்டன்,தமிழ்த்தேறல், தமிழ்மறை, தமிழ்மறையான், தமிழ்நாவன், தமிழ்நாடன், தமிழ்நிலவன், தமிழ்நெஞ்சன், தமிழ்நேயன், தமிழ்ப்பித்தன், தமிழ்வண்ணன், தமிழ்ப்புனல், தமிழ்எழிலன், தமிழ்நம்பி, தமிழ்த்தேவன், தமிழ்மகன், தமிழ்முதல்வன், தமிழ்முகிலன்.
தமிழன் மட்டுமே, தமிழை மொழி மட்டுமல்லாது
உயிராக நேசிக்கிறான்!!

Thursday, April 24, 2014

அரண்மனையில் ஒரு போட்டி!


விஷ பாம்புகள் மற்றும் முதலைகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர் தேர்ந்தெடுக்கலா ம்.
உயிர் பிழைப்பது சிரமம் என்பதால் போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும் யாரும் போட்டிக்கு வரவே இல்லை.

திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில் குதித்ததும் மன்னருக்கு குஷி. உயிரையும் துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன் போட்டிக்கு தயாராகி விட்டானே?
ஒரு வழியாக நீந்தி பத்திரமாக கரையேறி விட்டான்.
அவனை கட்டி அணைத்து, பாராட்டுதல்களை தெரிவித்து,
"உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்! ஆயிரம் வராகன் பொன்னா?"
"இல்லை..."
"பின்னே... 10 கிராமங்களா?"
"ப்ச்! வேண்டாம்..."
"ஆஹா! அப்படி என்றால் இளவரசியை திருமணம் செய்து கொள்கிறாயா?"
"தேவை இல்லை..."
"இது மூன்றில் ஒன்றை தானே பரிசாக அறிவித்து இருந்தேன். மூன்றுமே வேண்டாம் என்று சொல்லி விட்டாயே? ஆனாலும் உன்னை வெறும் கையுடன் அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள், கட்டாயம் அதை தருகிறேன்..."
"என்னை எவன் இந்த குளத்தில் தள்ளி விட்டான் என்று தெரியனும்...!"

Wednesday, April 23, 2014

தஞ்சை பெரிய கோவில்

உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது ,இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது ! ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)

நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை !
சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை , தமிழனின் பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம் !

Tuesday, April 22, 2014

முதுமையிலும் இளமை வேண்டுமா?

அனைவருக்குமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வந்தால் தான் மிகவும் கஷ்டம். நிறைய பேர் இத்தகைய பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நிறைய ஆன்டி-ஏஜிங் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அதற்கான பலன் சிறிது நாட்கள் மட்டும் தானே தவிர, முதுமை வயது எட்டும் வரை நீடிப்பதில்லை. ஆனால் இந்த பிரச்சனைக்கு உணவுகளால் தீர்வு காண முடியும். சாதாரணமாகவே உண்ணும் உணவைப் பொறுத்து தான் உடல் நிலை இருக்கும் என்று சொல்வார்கள். எனவே நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைய உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, உடலே நன்கு பொலிவோடு அழகாக மின்னும். அதிலும் குறிப்பாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்களில் வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபைன் மற்றும் லூடின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம். அந்த உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மாம்பழம்

கோடைகாலத்தில் மாம்பழம் மிகவும் விலைமலிவாக கிடைக்கும். இந்த பழத்தில் கரோட்டினாய்டு பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி.ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இவை சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும். எனவே முடிந்த அளவில் இதனை வாங்கி சாப்பிடுவது, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.

கேல்

கேல் (Kale) கீரையில் லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால், இளமையுடன் காணப்படலாம்.

பசலைக் கீரை

ஒரு கப் பசலைக் கீரையில், சருமத்திற்கும், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான 20, 350 mcg லைகோபைன் மற்றும் இதர வைட்டமின்களும் நிறைந்துள்ளன.

ப்ராக்கோலி

பச்சை இலைக் காய்கறிகளில் ப்ராக்கோலியில் அதிக அளவில் லைகோபைன் உள்ளது. எனவே சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, நன்கு இளமையாகக் காணப்பட, இந்த காய்கறியை உணவில் சேர்ப்பது நல்லது.

குடைமிளகாய்

குடைமிளகாயில் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும், வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதிலும் இந்த காய்கறியில் நிறைய வண்ணங்கள் உள்ளன. இவை அனைத்திலுமே கரோட்டினாய்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளன.

பால்

பாலில் கால்சியம், புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின் ஏ மற்றும் கரோட்டீனாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பாலை, அதிகம் குடித்தால், நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடன், இளமையோடும் இருக்கும்.

தக்காளி

தக்காளியில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. எனவே இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்திற்கும் மாஸ்க் போன்றும் பயன்படுத்தலாம்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பது தெரியும். ஆகவே இவற்றை சாப்பிட்டால், இதில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

தர்பூசணி

நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம் சாப்பிட, வெயிலினால் பாதிப்படைந்த சரும செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும்.

Monday, April 21, 2014

ஊட்டம் தரும் பிரசாதங்கள்


மேல் நாடுகளில் இல்லாத ஒரு பெருமை நமது புண்ணிய பாரத தேசத்திற்கு உள்ளது. பல மதத்தினரையும் அரவணைத்து ஒற்றுமையுடன் கூடிய ஒரு மனப்பாங்கை ஏற்படுத்தி அந்தந்த மதத்தினர் கொண்டாடும் விசேஷ திருவிழா நாட்களில் அவர்கள் வழங்கும் பிரசாதங்கள் உடலுக்கு ஊட்டமும் மனதிற்கு உற்சாகம் தரும் வகையிலும் அமைத்துள்ளனர். என்பது ஒரு சிறந்த விஷயமாகும்.
இந்துக்கள் தம் மத கலாசாரப்படி பல விதமான பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். அவ்விதம் தயாரிக்கப்பட்ட உணவு பதார்த்தங்கள் சுவாமிக்கு நிவேதனம் செய்த பிறகு தங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுடன் பகிர்ந்து உண்ணுகின்றனர். இவ்வகை பிரசாதங்கள் அனைத்தும் விஞ்ஞான அடிப்படையில் தான் அமைந்துள்ளது என்று தெரிந்தால் அனைவரும் ஆச்சரியப்படுவர். நம் ரிஷிகள் ஏற்படுத்தியுள்ள எந்தவொரு காரியமும் விஞ்ஞான நோக்கில்தான் செய்துள்ளனர். பண்டிகை நாட்களில் செய்யப்படும் உணவை நமது அன்றாட வாழ்வில் செய்து கொள்ள இயலாது என்பதால் அவ்வித விசேஷ நாட்களில் செய்து சாப்பிடுவதால் விசேஷ ஊட்டமும் பலமும் பெறுகிறோம். முன்பெல்லாம் கிராமங்களில் ராமாயணம், பாகவதம், மகாபாரதம் போன்ற உபன்யாஸங்கள் நிறைவடைந்ததும் சுண்டல் பிரசாதம் விநியோகிப்பார்கள். நமக்குத் தேவையான புரதச்சத்தும், சிறிய அளவில் கால்ஸியம், இரும்பு, வைட்டமின் H1, H2, Y, போன்றவைகளும் சுண்டலில் இருப்பதால் நமக்கு உடல் ஆரோக்யமும், அவ்வகை உபன்யாஸங்களால் மன ஆரோக்யத்தையும் ஒரே நேரத்தில் சம்பாதிக்கின்றோம்.
வருடப் பிறப்பு அன்று பஞ்சாங்க படனம் அல்லது சிரவணம் செய்த பிறகு, கடலைச் சுண்டல், பானகம், நீர்மோர் சாப்பிட வேண்டும். கடலைச் சுண்டலுக்கு பதிலாக பயத்தம்பருப்புச் சுண்டலும்ட சாப்பிடலாம். இதிலும் கால்ஸியம், புரதம், இரும்பு, வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனாலும் கடலை சுண்டல் அளவு இராது. கடலையை முதல் நாள் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் pressure cooker ல் வேக வைத்து, சாப்பிட்டால் உடலுக்கு நிரம்ப புரதச்சத்து கிடைக்கிறது. ஆனால் கடலையை எண்ணெய்யில் வறுத்தால், அதிலுள்ள ஊட்டப் பொருள்கள் வீணாகி விடும்.
வெல்லத்தில் புரதசத்து சிறிதளவும், நிரம்ப இரும்பு சத்தும், வைட்டமின் ஏயும் உள்ளது. வெல்லப் பானகம் அருந்துவதால் இரத்த விருத்தி ஏற்படுகிறது. இரத்தத்தில் காணப்படும் ஹீமோகுளோபின் விருத்தி அடைகிறது. அதுதான் பிராணவாயுவை பல்வேறு பாகத்துக்கு எடுத்துச் சென்றும், கரிமில வாயுவை நுரையீரலுக்கு திருப்பி எடுத்தும் செல்கிறது.
நீர்மோர் சுவையானதும், அஜீர்ணத்தை போக்கும் தன்மையுடையது. கோடைக்காலத்தில் ஏற்படும் உப்புச் சத்துக் குறைவை நீர்மோர் நீக்குகிறது. ஸ்ரீராம நவமி, ராதா கல்யாணம் போன்ற பஜனை விழாவிலும் இவையனைத்தும் இடம் பெறுகின்றன.
கடவுளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வழங்கப்படும் பஞ்சாமிர்தம் என்பது பால், நெய், தேன், வெல்லம், பழவகைகள் கொண்டது. பாலில் புரதசத்தும்,
கால்ஸியம், வைட்டமின் ஏ-யும் நிரம்ப இருக்கிறது. நமது உடல் வளர முக்கியமானது. நெய் கொழுப்புப் பொருளாக இருப்பதால் தேவையான சக்தியைத் தருகிறது. வெல்லத்தில் இரும்புச் சத்தும், தேன் சக்தி தருவதிலும், பழங்கள் வைட்டமின் ஏ-யும் நிரம்பியுள்ளதால் பஞ்சாமிர்தம் நமக்குத் தேவையான பல உடல் சக்திகளை அளிக்கிறது.
ஆடி முதல் தேதி தேங்காய்ப்பால் தயாரித்து உண்பது சூட்டைத் தணிக்கும். விநாயக சதுர்த்திக்குக் கொழுக்கட்டையை அரிசி மா, வெல்லத்தினால் தயாரித்து ஆவியில் வேக வைத்து சாப்பிட ஊட்டத்தைத் தருகிறது. கார்த்திகைத் தீபம், மாசியும் பங்குனியும் காரடையான் நோன்பின் போதும் வெல்ல அடை, உப்பு அடை செய்கிறோம். உப்பு அடையில் அரிசிமாவுடன் உப்பு, இஞ்சி, மிளகாய் சேர்த்து ஆவியில் வேக வைத்து சாப்பிடுவதால் உடல் ஊட்டமும், ரத்த விருத்தியும் ஏற்படுகிறது.
மார்கழி மாதத்தில் உஷக்கால பூஜை செய்து பகவானுக்கு அர்ப்பணித்து பிரசாதமாக வழங்கப்படும் பொங்கல், மகர சங்கராந்தியின் பொழுது பலவித பருப்பு வகைகள் கலந்து தயாரிக்கப்படும் பொங்கல் சத்தான உணவு வகைகளாகும். சங்கராந்தியின் பொழுது கரும்பை கடித்து சாப்பிடுவதால் பல்லுக்கு நல்ல பலமும், உடல் சக்தியும் அடைகிறோம்.
ஆந்திராவிலும், மைசூரிலும் சில பண்டிகைகளில் பெண்களை வீட்டிற்கு அழைத்து முளை கட்டிய கொண்டக்கடலையும், ஊறவைத்த பயத்தம்பருப்பு, தேங்காய், மாங்காய், இஞ்சி கலந்து "பாசிப் பருப்பு" தருகிறார்கள். இவையில் புரதசத்து ஏராளம்.
அமாவாசை, மாதப்பிறப்பு, அட்சய FF புண்ய காலங்களில் வீட்டில் பயத்தம்பருப்பு பாயஸம் செய்து சாப்பிடுவதால் Blood Urea குறைவதாக கூறுகிறார்கள். புரதசத்தும் இதில் அதிகம்.
பெண் பருவடையும் போது புட்டு தயாரிக்கிறோம். அரிசி, பொங்கல், வெல்லம், நெய் கலந்து தயாரித்து அப்பெண்ணிற்கு கொடுத்து சாப்பிடச் சொல்வதால் அவர் தளர்ச்சியடையாமல் போதிய சக்தியை பெறுகிறாள்.
மாரியம்மன் கோவில் விழாவில் கஞ்சி காய்ச்சி கூழாக ஊற்றுகிறார்கள். அந்தக் கஞ்சியில் நமக்குத் தேவையான சக்தி தரும் பொருள் இருக்கின்றது. ஆகவே நமது விழாக்கள், பண்டிகைகளில் வழங்கப்படும் பிரசாதங்கள் விஞ்ஞான ரீதியில் நல்ல சத்துள்ள உணவாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிகிறோம்.

Sunday, April 20, 2014

தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் முதலியன, தவறாமல் நம் உணவில் இடம்பெற வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை.
நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகிவிடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோயும் ஏற்படுகிறது.
இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கொரேனெரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சேருங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரு ட், வெங்காயம் இதில் ஏதேனும் இரண்டாவதாக இடம் பெறட்டும்.
சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்த தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல் படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.
பலமான விருந்தின்போது கேக், மட்டன் முலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.
பல நோய்களுக்கு இந்தத் தாது உப்புக்குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றையாவது அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும்.
இந்த வகையில் தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவதும் நல்லதாக அமைகிறது.

Saturday, April 19, 2014

சோள சாலட்

என்னென்ன தேவை?
 
சோளம் - 1/2 கப், 
தக்காளி - 1/4 கப், 
ஸ்பிரிங் ஆனியன் - இரண்டு, 
குடைமிளகாய் - 1/4 கப், 
உப்பு - தேவைக்கேற்ப, 
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், 

எப்படிச் செய்வது?  

சோளத்தை உரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளி, குடைமிளகாய், ஸ்பிரிங் ஆனியன் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் சோளத்தைக் கலந்து எலுமிச்சைச்சாறு,  உப்பு சேர்த்துப் பரிமாறவும்.

Friday, April 18, 2014

மன அழுத்தம்/ மன உளைச்சல்

பெண்களுக்குத்தான் ஆண்களை விட மன அழுத்தம் இன்றைய கால கட்டத்தில் அதிகம் தென்படுவதாக ஒரு Survey கூறுகிறது. ஆனால் நாம் இவ்விஷயத்தை முன்பே அறிந்துள்ளோம். ஏனென்றால் அவர்கள் செய்யும் வேலை, கணவர், குழந்தைகள், பணவரவு செலவு, சூழ்நிலை மற்றும் குடும்ப எதிர்காலம் ஆகியவற்றால் பெண்களுக்கு மன உளைச்சல் ஆண்களைவிட அதிகம் இருப்பதாக தெரிகிறது, வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நம்முடைய பொறுப்புகள் அதிகமாவதை உணறும்போது உடல்மட்டுமின்றி மன அளவிலும் மிகுந்த தளர்ச்சியைஅந்த எண்ணமே ஏற்படுத்துகின்றது.
மன உளைச்சல் சில சமயங்களில் நாம் அறியாமலேயே நம்மேல் திணிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு வேலையை இழத்தல் அல்லது நோய் வாய்ப்படுதல் முதலியன, சில விஷயங்களை நாம் அறிந்தே துன்புறுகிறோம். உதாரணத்திற்கு நாம் செய்யும் வியாபாரம் நஷ்டம் ஏற்படும் போது இன்னும் சிறிது காலம் செய்து பார்க்கலாம் என்று நினைத்து கடன் வாங்கியும் வியாபாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரமுடியாமல் கடனாளியானவர் ஏராளம். மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் நம்மால் நிச்சயமாக அடக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்திய மன அழுத்த விஷயங்களைக் கூட மனவலிமையினால் அமைதியைப் பெறமுடியும் என்பதே!உதாரணத்திற்கு வேலை போய் விட்டது, ஆனால் செலவுகளை சரிவர திட்டமிட்டு செய்தவருக்கு வங்கிக் கணக்கில் கணிசமான அளவு சேமிப்பு இருக்குமானால், வேறு ஒரு புதிய வேலை கிடைக்கும் வரை இந்த சேமிப்பை உபயோகப்படுத்தி குடும்பத்தை காப்பாற்றினால் மன அழுத்தம் ஏற்படாது. உணவுப் பழக்கம் சீரான வகையில் வைத்துக்கொள்ளுதல். உடற்பயிற்சி, வேண்டிய அளவு உறக்கம் ஆகியவை உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மன அழுத்தம் ஏற்படாமலும் நோய் வராமல் தடுப்பதற்கும் மிக அவசியமாகும். நம்மால் மன அழுத்தத்தை முழுவதுமான நீக்க முடியாவிட்டாலும் அதனுடைய பாதிப்பால் ஏற்படும் உடல் மற்றும் மன உபாதைகளை குறைக்க முடியும்.
கீழ் காணும் சில பழக்கங்கள் நம் மனம், உடல் ஆகியவற்றிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தி அதனால் மன உளைச்சல் சமாளிக்க முடியாமல் போகக்கூடும். அது போலுள்ள சமய சந்தர்ப்பத்தில் உடல் மற்றும் மனவலிமையை ஒன்று திரட்டுவது. மறுபடியும் புத்துணர்ச்சி ஊட்டி எவ்வாறு பாதிப்புகளை சமாளிப்பது போன்றவற்றை காண்போம்.
மன அழுத்தத்திற்கு அவசர சிகித்ஸை
திடீரென்று மன உளைச்சலை ஏற்படும் நிகழ்ச்சிகள் சம்பவிக்கும் போது அவசர சிகித்ஸை தேவைப்படுகிறது. சில வேதியல் மாற்றங்கள் உடலில் ஏற்படும் போது மன அழுத்தம் உண்டாகிறது. அதற்கு காரணம் -
தன் நிலை இழத்தல்
உணர்ச்சிப் பெறுக்கு
தன்னைத் தானே குறை கூறுதல்
நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களைப்பற்றி நினைத்து அதிக கவலையுறுதல்
அச்சம், கோபம், சோர்வு மற்றும் கவலைகள் அதிகமாய் ஏற்படும் போது.
வேண்டத்தகாத ஒரு விஷயம் நடக்கும்போது, சில விநாடிகளிலேயே சங்கிலித் தொடராக மன அழுத்தத்தின் விளைவாக பாதிப்புகள் ஏற்படுகின்றன. மூளையில் முக்கிய நரம்புகள் தூண்டப்பட்டு அவ்விஷயத்திற்கு எதிரான செயல்களை செய்ய மூளையில் கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. செய்திகளை சுமந்து செல்லும் மூளை நரம்பு மண்டல வேதியல் கூறுகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு நம்மை அவ்விஷயத்தினை எதிர்க்கச் சொல்லியோ அல்லது தப்பிப்பதற்கோ ஆணைகள் பிறக்கின்றன. இதை தடுப்பதற்கு அல்லது எதிர்த்தல், ஓடிவிடுதல் ஆகிய நிலைகள் மாறி அமைதி ஏற்படுவதற்கு சம்பவம் நடக்கும் இடத்திலேயே மனோதத்துவ நிபுணர்கள் கூறும் வழிகள்.
மூச்சை நன்கு இழுத்துவிடங்கள்.
மனம் மற்றும் உடலை அமைதியுறச் செய்யுங்கள்.
கேளுங்கள், சாந்தமாக மனதை இருக்கச் சொல்லி.
நாம் முன்பு அமைதியுடன் இருந்த நேரங்களை நினைவாற்றலில் கொண்டுவரவும்.
அமைதியான எண்ண அலைகள் மனதில் ஏற்படுவதினால் உண்டாகும் வித்தியாசத்தை உணருங்கள்.
மன உளைச்சல் நம்மை மீறும்போது, மூன்று அல்லது ஐந்து முறை ஆழமாக மூச்சு விடுங்கள். இப்படிச் செய்வதால் நமக்கு இரு நன்மைகள் விளைகின்றன. முதலாவதாக படபடப்பான நிலைகளில் சிறிது நேரம் மூச்சுவிடுவதற்காக எடுத்துக் கொள்வதால் அந்த கால அவகாசமே நமக்கு படபடப்பு குறைய வழி வகுக்கிறது. இரண்டாவதாக Neo Cortex என்ற சிந்தனா சக்தியை உடைய மூளைபாகமானது, வசப்படவும், அதிக பிராண வாயு கிடைப்பதன் பயனாக நல்லுணர்வை வெளிப்படத்தும் dopamine மற்றும் Serotonin என்ற வேதியல் செயல் கூறுகளை அனுப்புகின்றது. இதன் மூலமாக நம்முடைய தீர்மானங்கள் மிக்கவாறும் சரியாக அமைவதால் பின்நாளில் அதிகம் வருந்தும் நிலை ஏற்படுவதில்லை.
மன அழுத்தத்தினால் தசைகள் உடலில் இறுகுகின்றன. சிறிது நேரத்திலேயே உடல் தளர்ச்சி அடைவதை உணர்கிறோம். தசைகள் இறுகுவதால் உடல் சக்தி வீணாகிறது, மூச்சை சீராக இழுத்துவிட்டுக் கொண்டே அமைதியாக 'relax' அல்லது ஒரு பிடித்த வார்த்தையையோ மந்திரம் போல சொல்லவேண்டும். ஒரு கட்டளையாக மனம் வழியாக உடலுக்குச் செல்வதால் உடல் மறுபடியும் அமைதியான நிலைக்கு திரும்புகிறது.
மன உளைச்சலுக்கு எப்போதும் ஒரு காரணமாயிருப்பது நம் எண்ண அலைகளே, 'எனக்கு என்ன நேர்ந்துவிட்டது? அவன் ஏன் இவ்வாறு தவறு செய்கிறான்? போன்ற எண்ணங்கள் நம்முள் ஆரோக்யமில்லாத தன்மையும் அதன் மூலம் மேலும் மன அழுத்தம் அதிகமாவதை அறியலாம். இப்டி தவறான எண்ணத்தை நிறுத்தி நான் இந்த படபடப்பான நிலையில் என்ன எண்ண வேண்டும்?' அமைதி, நம்பிக்கை, தெய்வத்தினருகாமை, உணர்வுகளை கட்டுப்படுத்தல் போன்றவை நல்ல பலனைத்தரம், நம்முடைய எண்ணங்களே நாமாகிறோம் என்று பெரியோர் கூறுவர்.
படபடப்பான நேரங்களில் அமைதியை விரும்பும்போது நாம் முன்னொரு சமயத்தில் இந்த இடத்தில் எவ்வளவு அமைதியுடனிருந்தோம் என்ற எண்ணமே படபடப்பைக் குறைத்து மன அழுத்தம் நீங்க உதவுகிறது, மூளையில் புதைந்துள்ள இந்த ஞாபக சக்தி தூண்டப்படுவதால் மனதிற்கு அமைதிதானே வந்துவிடும்.
இறுதியாக சிந்தனை செயல்திறன் வழியாக நாம் மேற்கொள்ளும் மன உழைப்பின் பயனாக ஏற்படும் மாற்றங்களை சிறுது நேரம் எடுத்துக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள். சரியான சிந்தனை, மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்திய விஷயத்திலிருந்து படபடப்பான நிலை விலகி மனம் சாந்த நிலையை அடைய உதவுகிறது. மட்டுமின்றி அடுத்த நமது நிலையான தீர்மானத்தை அமைதியான மனதினால் எடுக்கமுடிகிறது. மேல்குறிப்பிட்ட வழிமுறைகள் நினைவில் சுலபமாக வைத்துக் கொள்ளவும். மன உளைச்சலில் சரியாக உபயோகத்தில் கொண்டுவரவும் எளிமையான வழிகள், உடல் மற்றும் மனம் இரண்டும் நெருங்கிய தொடர்பு உள்ளதை பல ஆராய்சிசாயளர்கள் நிரூபித்துள்ளதால், அவகைளை கட்டுப்பாட்டில் வைக்க மேலுள்ள வரிகள் உதவுகின்றன.
மனவலிமை குன்ற காரணங்கள் -
அதிகமாகவும் கட்டுப்பாடில்லாமலும் T.V. பார்ப்பது
T.V. news, ரேடியோ மற்றும் பத்திரிக்கைகள் அதிகமாக பார்ப்பது, கேட்பது, படிப்பது.
குறை கூறுபவரிடையே, வேலை அதிகம் வாங்குபவர்களிடையே மற்றும் வீட்டிலும் அதே நிலை.
தன்னைத்தானே குறைகூறிக் கொள்வது
அதிக கவலை
பிடிக்காத சூழ்நிலையில் வாழ்க்கை
பணப்பிரச்சனை மற்றும் ஊதாரித்தனம்.
கொடுத்த வேலையை முடிக்காமலிருத்தல்
சண்டை. சச்சரவுகளை தீர்க்காமலிருப்பது.
உடல் வலிமை காரணங்கள்
சிகரெட் குடித்தல்
மது அருந்துதல்
கஞ்சா, அபின் உபயோகம்
சத்தில்லாத உணவு
சர்க்கரை வியாதி
அதிக காபி, டீ.
உடற்பயிற்சி செய்யாமலிருத்தல்.
உடல் பருமன்
போதிய உறக்கம் இல்லாமலிருத்தல்
எப்போதும் படபடப்பு, அவசர செயல்கள்.
ஆன்மீக வலிமை குன்ற காரணங்கள்
வெளியே சொல்வதற்கு பயந்து விஷயங்களை மனதிலேயே பூட்டி வைத்தல். செய்ய விருப்பமில்லாத செயலை வலுக்கட்டாயமாக செய்தல் விருப்பமில்லாத தொழிலை வேறு வழி தெரியாமல் அதையே செய்து கொண்டிருத்தல் சுமுஹமில்லாத நட்பும்,உறவும் வளமிக்க வாழ்க்கையை அடைந்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆரோக்யமான வாழ்க்கை முறையை கூறுபவர்கள், தியானம் மற்றும் அதுபோலுள்ள மனதை அமைதியுறச் செய்யும் வழிகள் மட்டுமே நலமிக்க வாழ்க்கைக்கும், வாழ்க்கையின் வசதிக்கும், மருத்துவச் செலவுகளை குறைக்கவும் உன்னதமான முறை என்று அறிந்துள்ளனர், மிக முக்கியமாக, தியானப்பயிற்சி இன்றைய மன அழுத்தம் மற்றும் உளைச்சலுக்கு காரணமாகவுள்ள காலகட்டத்தில், வாழ்க்கையை எப்பபடி சிறப்பாக அமைத்துக் கொள்வது என்ற படிப்பினையும்.அது மூலம் நலமான வாழ்கைகைக்கும் பெரிதும் உதவுகிறது.
நமது அன்றாட அலுவல்களாகிய - வேலை, குழந்தை பாதுகாப்பு, சமையல் போன்றவை அவசர கதியில் உள்ளதால் நம்முள் கவலை என்னும் சங்கிலியால் பிணைக்கப்படுவது போல் உணர்கிறோம். கவலை சங்கிலியை அவிழ்த்து விட மிகச்சிறந்த வழி உடற்பயிற்சிதான்.
உடற்பயிற்சியின் மூலமாக மூளையில் உள்ள நரம்பு மண்டலம் வேகமாக செயல்படத்தொடங்குகிறது, CORTISOL என்ற HORMONE உடல் முழுவதும் நிரம்புகிறது, இதயத்துடிப்பு அதிகமாகிறது, மூச்சு வேகமாக செயல்படுகிறது. ரத்த அழுத்தம் உயர்கிறது. தசைகள் முறுக்கேறுகின்றது. சிரத்தை விஷயங்களில் கூர்மையாகிறது. மன அழுத்த நிலைகளில் பெண்களுக்கு இவை அனைத்தும் ஏற்படுகின்றன. ஆனால் உடறப்யிற்சியிலும் இவ்வாறு ஏற்படுவதால் மன அழுத்தத்தை அது நன்கு நீக்கிவிடுகிறது. மனம் அமைதியடைவதை காணலாம், சைக்கள் மிதிப்பது. ஒரே இடத்தில் குதிப்பது போன்ற தொடர்ந்து ஒரே மாதிரியான அங்க அசைவுகளை கொண்ட உடற்பயிற்சிகள், தியானத்தினால் மூளையில் ஏற்படும் நன்மைகளை இவ் உடற்பயிற்சியினாலும் கிடைக்கப் பெறுகிறோம், உடற்பயிற்சியின் பலனை ஜெர்மன் அறிஞர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார், "மலை ஏறுதல் என்ற உடற்பயிற்சியை சில மணி நேரங்கள் செய்யும் ஓரு மூடன், தியானத்தால் உயர்வைடந்த ஒரு ஞானியும் ஒரே நிலையிலுள்ளவர்களர்வார்கள்!" (மூளையில் ஒரேவித மாற்றங்கள் நடைபெறுவதால்)
மன அழுத்தம் தவிர்த்திட நல்ல உறக்கம் இரவில் தேவை. ஆழ்ந்த உறக்கம் நமது நரம்பு மண்டலங்களை நன்கு வேலை செய்ய உதவுகிறது. நரம்புகளில் ஒத்துழையாமையினால் கவனம் சிதறுதல், ஞாபக சக்திமற்றும் விவேகம் ஆகியவை குறைந்து விடுகின்றன, ஆழ்ந்து உறக்கத்தினால், உடல் அணுக்கள் நிறைய புரதங்களை உற்பத்தி செய்கின்றன, அணுக்களின் வளர்ச்சி, மன அழுத்தம் மற்றும் புற ஊதாக் கதிர்களினால் உடலில் ஏற்படும் உடல் அழிவு ஆகியவை இந்த புரத உற்பத்தியினால் காக்கப்படுகின்றன. மூளையில் ஞாபக சக்தியை கொண்டுள்ள இடத்தில் நாம் புதிதாக கற்றுக் கொண்ட விஷயத்தை நன்கு பதிய வைப்பதற்கு ஆழ்ந்த உறக்கம் பெரிதும் உதவகிறது, உறக்கமின்மையினால் ஆரோக்யம் கெடுதல், நெஞ்சுவலி, மூட்டுகளில் வலி, மனசோர்வு, தினப்படி வேளைகளில் தடுமாற்றம் ஆகியவை ஏற்படுகின்றன, தற்காலிகமாக உறக்கம் குறைந்தாலும் கூட Carbohydrates உடலால் உடைப்பது, Harmone வேலைகளில் மாற்றங்கள், சர்க்கரைவியாதி- ரத்தக் கொதிப்பு ஆகியவை மிக மோசமான நிலைகளை அடைதல் என்பவை ஏற்படுகின்றன. சீரான உடற்பயிற்சி. எண்ணைக்குளியல் யோகாசனம், தியானம் வாசனைப் பொருட்களால் குளியல் மூலம் ஆழ்ந்த உறக்கத்தை நாம் பெற்றிட விடாது முயற்சிகள் செய்ய வேண்டும்.
மனவலிமை அதிகம் பெற வழிகள் -
பிடித்த புத்தகங்கள் அல்லது ஒலிநாடாக்களை படித்தல் (அ) கேட்பது மனதிற்கு இன்பம் தரக்கூடிய நண்பர்கள் (அ) பந்துக்கள் ஆகியோருடன் நேரத்தைக் கழிப்பது.
வேண்டுமளவு வங்கிக் கணக்கில் பணம் வைத்திருத்தல், அத்யாவசியமான செலவுகளை மட்டுமே செய்தல்.
தங்குமிடம் சுத்தமாகவும், பொருட்களை சரியான இடங்களில் வைத்தல் பழைய சண்டை சச்சரவுகளை எதிர்கொண்டு அவைகளை தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுதல்.
உடல் வலிமை பெற வழிகள் -
சத்துள்ள உணவுகள்
குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர்
வெளிச்சம்
உடற்பயிற்சி
நிறைய உறக்கம்
மற்றவரின் அதிகாரம் இல்லாமல் வேலைகளை நம்மால் முடிந்த வேகத்தில் செய்தல்
யோகா, எண்ணைக் குளியல்
வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தல்
பாராட்டுக்களும், அரவணைப்பும்.
நாமும், பிறரும், என்றென்றும் மன உளைச்சலை தவிர்க்க, செய்யும் வேலைகள் சிறப்பாக இருப்பின் அவர்களை மனதாரப் பாராட்டுவது, ஊக்குவிப்பது, வேண்டிய உதவிகைள செய்வது என்பதே. நம்மைப் பற்றி பிறர் எண்ணும் போது மனதில் சந்தோஷத்தை நீங்கள் ஏற்படுவீர்களானால் மன உளைச்சல் என்ற பிரச்சனை எப்போதும் இராது என்பது நிச்சயம்.

Thursday, April 17, 2014

புத்திர பாக்கியம் தரும் பவுர்ணமி பங்குனி நீராடல்

குடந்தை மயிலாடுதுறை சாலையில் திருவாவடுதுறைக்கு வடகிழக்கே ஒரு கி.மீ தொலைவில் உள்ள திருவாலங்காட்டில் வட வாரண்யேசுவரர் வண்டார்குழலியுடன் அருள்புரிகிறார். தேவேந்திரன் விருத்தாசுரனைக் கொன்ற பாவம் நீங்க இத்தலத்தில் ஈசனை வழிபட்டு ஜெயந்தனைப் பெற்றார் என்றும், நான்முகன் இத் தலத்தில் தீர்த்தமாடி 10 புதல்வர்களைப் பெற்றார் என்றும் தலபுராணம் கூறுகிறது. பக்தர்கள், பங்குனி பவுர்ணமியில் இத்தல தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இங்கே இரண்டாம் பிராகாரத்தில் புத்திரகாமேசுவரரை தரிசிக்கலாம். 63 நாயன்மார்கள், தன் மனைவியுடன் யமன், சித்திரகுப்தர் ஆகியோரும் இங்கே அருள் புரிகின்றனர். பறவை நாச்சியார்- சங்கிலிநாச்சியார் சமேத சுந்தரரையும் இங்கு தரிசிக்கலாம். ஈசனின் பாதத்தைத் தன் தலைமேல் சூடிக்கொண்டவன் என்ற பட்டம் பெற்ற மூன்றாம் குலோத்துங்கனும் அழகிய சிலை வடிவாகக் காட்சியளிக்கிறான்.

Wednesday, April 16, 2014

அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் ப லன்கள்:

அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்:
1. நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
2. இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
3. வயிற்றுப் புண் குணமாகும்.
4. இரத்த அழுத்தம் குணமாகும்.
5. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
6. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
7. நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
8. மலச்சிக்கல் நீங்கும்.
9. புற்று நோய்க்கு நல்ல மருந்து.
10. உடல் இளைக்க உதவும்
11. இரவில் நல்ல தூக்கம் வரும்.
12. பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
13. மூட்டு வலி நீங்கும்.
14. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
15. நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.
16. அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.
17. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது.
18. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.
அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

Tuesday, April 15, 2014

கடலை பருப்பு ‘பேக்’

என்னதான் குளித்து முடித்து உற்சாகமாக வந்தாலும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் எண்ணெய் வழிந்து டல்லாகி விடுகிறீர்களா?

தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ. துளசி இலை 50 கிராம். வேப்பங்கொழுந்து 5 கிராம். இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு “பேக்” போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள்.
வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.

Monday, April 14, 2014

கீரைகளின் மருத்துவ குணங்கள்:


வெந்தயக்கீரை:
  • வெந்தயக்கீரை உடலுக்கு ஊக்கத்தை அளிக்க கூடியது. வயிற்றுப்புண்கள் மற்றும் பேதியை குறைக்கும். அதிகமாக இரும்பு சத்துக்கொண்டது.
  • இந்த கீரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான நோய்கள் குறையும்.
முருங்கைக்கீரை:
  • இந்த கீரை மிகவும் சக்தி மற்றும் வலிமை வாய்ந்த கீரை ஆகும். அதிக அளவில் இரும்பு சத்து கொண்டது. ஆண்மையை அதிகரிக்க செய்யும். மலச்சிக்கல் குறையும். உடலின் வெப்பத்தை குறைக்கும்.
  • இந்த கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண் மற்றும் இருதய நோய்கள் தாக்காமல் தடுக்கலாம். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
  • மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை குறைக்கும். இரத்தச்சோகைகளை குறைக்கும்.
அரைக்கீரை:
  • அரைக்கீரை உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி கொண்டது. மேலும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும்.
  • இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் காணப்படும். தேமல், சிரங்கு, சொறி போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
சிறுகீரை:
  • உடலுக்கு ஊக்கத்தை தந்து தளர்ச்சியை போக்க வல்லது. குடல் புண்கள் மற்றும் குடலுக்கு வலிமையை தரக்கூடியது. மலச்சிக்கல் குறையும்.
  • இந்த கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடலில் அதிக பித்தத்தை குறைக்கும்.
அகத்திக்கீரை:
  • இந்த கீரை உடலில் காணப்படும் அதிக அளவு வெப்பத்தை குறைக்கும். பித்தம் மற்றும் தலைச்சுற்று, மயக்கம் போன்ற பித்த சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குறைக்கும் வல்லமை வாய்ந்தது.
  • இரத்தத்தை சுத்திகரிக்கும். உடலில் ஏதேனும் விஷம் இருந்தால் அதை முறிக்கும் திறன் வாய்ந்தது. குடற்புழுக்களை அழிக்கும்.
  • அகத்தி கீரையை அளவாக எடுத்து சாப்பிட்டு வந்தால் நோய்களை போக்கும். அளவுக்கு மீறி சாப்பிட்டு வந்தால் பேதி ஏற்படும். அளவாக சாப்பிட்டு வளம் பெறுவோம்.
மணத்தக்காளி கீரை:
  • இது வயிற்றுப்புண்களை போக்கும் திறன் வாய்ந்தது. குடல் புண்களை குறைத்து குடலுக்கு பலம் அளிக்கும்.
  • இந்த கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகளை குறைக்கும்.
பாலக்கீரை:
  • இந்த கீரை உடலுக்கு வலிமையை தரக்கூடியது. மலச்சிக்கலை குறைக்கும்.
  • இதை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் நோய்கள் எதுவும் வராமல் தடுக்கும்.
புளிச்சக்கீரை:
  • இந்த கீரை உடலுக்கு வளமை தரக்கூடியது. இந்த கீரையை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு, இரத்தபேதி மற்றும் சீதபேதியை குறைக்கும்.
பசலைக்கீரை:
  • இந்த கீரை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. சிறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது.
  • இந்த கிரையை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். குடல் புண்களை குறைக்கும்.
கீரைகளின் மருத்துவ குணங்களை அறிந்து சரியான முறையில் உணவில் கீரைகளை சேர்த்து சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்